அன்று அந்த அதிசயம் நடந்தது…!
அவர் சித்தரும் இல்லை, யோகியை போன்றும் தெரிந்ததில்லை ஆனால் மெல்ல மெல்ல அந்த ஒளி, அவரிடமிருந்த காந்தம் என்னை முழுமையாக ஆர்ப்பரித்துவிட்டது. சாதாரண மனிதரைப் போல அறிமுகமானார். ஒரு நண்பராய் ஓடி விளையாடினார்.
அவர் அருகில் உறங்கிய அந்த இரவில் புரிந்தது ஆஹா, இவர் சாதாரண மனிதர் அல்ல என்பது அவர் அருகில் இருந்தபோது இனம் புரியாத ஆனந்தம் என் ஹரா மையத்தில் அந்த பருவத்தில் எனக்கு தெரியவில்லை மிகப் பெரிய பொக்கிஷத்தை எனக்கு காண்பிக்கப் போகும் குரு இவர் என்று..
பிரபஞ்சத்தின் திரையைக் கிழித்து சூட்சுமத்தை கண்ட தீர்க்கதரிசி அருகில் இருக்க எனது இருப்பின் ஏக்கம் பெருகியது இருப்பு கொள்ளவில்லை, என்ன காரணமோ தெரியவில்லை, என்ன ஏக்கம் அது புரியவில்லை, மறக்க முயல்கிறேன் முடியவில்லை, எனது ஹாஸ்டல் நண்பர்கள் எல்லோரும் கேட்க.. பெற்றோரின் நினைவு வந்துவிட்டது என்றேன் உடனே பெற்றோருக்கு போன் போனது, பதறியப் எனது தந்தை, வார இறுதியில் பார்க்க வருவதாக சொன்னார்.
ஆனால் இதுவல்ல எனது ஏக்கம் என்று எனக்கு நன்றாக புரிந்தது, அன்று இரு கண்களிலும் கண்ணீர் பெறுக புத்தகத்தால் அதை மறைத்துக் கொண்டேன், அப்போது அகஸ்டா அங்கு வந்தார் என்னை கட்டி அனைத்துக் கொண்டார் ஒரு தகப்பனின் அரவணைப்பு அது, புன்னகையுடன் ஒரு சிறு போட்டோவை நீட்டினார்.. அதில் இறையே உருவான.. கடந்த நூற்றாணடில் விழிப்படைந்த ஆகச் சிறந்த ஞானி ரமண மகரிஷி அவர்களின் புகைப்படம் அது.
அதற்கு பின்புறம் அகஸ்டா எனக்கருளிய செய்தி ஒன்று இருந்தது,
“அவரவர் பிராப்த பிரகாரம்
அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான்
என்றும்.. நடவாதது எம்முயற்சிக்கும் நடவாது
என்றும் நடப்பது என் தடை செயினும் நில்லாது
இதுவே திண்ணம் ஆகையால் மௌனமாய் இருக்கை நன்று.”
என்று இருந்தது.
அந்த விடலை பருவத்தில் எனக்கு அது புரியவில்லை என்றாலும் அதை என் மனதிற்குள் பத்திரப்படுத்தினேன்.
ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் வீட்டில் அவருடன் தங்க இயற்கை வழி வகுத்தது, எப்போதும் அவரை சுற்றி பலர் இருப்பார்கள், ஆனால் அன்று அகஸ்டா தனிமையில்
படித்துறையில் மௌனத்தில் இருந்தார். எப்போதும் பல கேள்விகள் தொடுக்கும் எனது மனமும் அமைதியில் இருந்தது. அன்று அந்த நிலவின் ஒளியில் ஆன்மீகத்தை பற்றி பேச ஆரம்பித்தோம் மெல்ல மெல்ல அந்த பேச்சு ‘ ஆழ்ந்த விழிப்பு’ , ‘சரணாகதி ‘ நோக்கி சென்றது அகஸ்டாவின் வார்த்தைகளில் இருந்த அதிர்வு அவருடைய பிராணனின் லயம் எல்லாம் இணைந்து என்னை அறியாமல் என்னுள் விழிப்போடு மனதை பார்க்கத் தொடங்கிவிட்டேன். அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருக்க, அந்த சமயம் விளக்கை சுற்றி தெரியும் ஒளி ஜ்வாலை அகஸ்டாவிடம் தெரிந்தது!
சில நொடிகளில் அந்த அதிசயம் நிகழ்ந்தது.. அருகில் தொடர்ந்து பேச்சு சத்தம் கேட்டு கொண்டிருந்தாலும் என்னுள் ஒரு பேர் அமைதி, நிசப்தம், நிச்சயம் சொல்கிறேன் எனது இந்த நிலையினை அகஸ்டா அறிவார் அவர் கண்களில் தெரிந்தது அவர் சிரிப்பில் தெரிந்தது…
மெல்ல மெல்ல நான் விரிவடைவதை போல் உணர்ந்தேன். எத்தனை முறை தியானம் செய்து இருக்கின்றேன் எத்தனை முறை முயற்சி செய்திருக்கின்றேன்… தேடி கிடைக்காத கல்பதரு அந்த நிலை… எல்லாவற்றிலும் இருந்து என்னை தூக்கி எறிந்தது போல், அனைத்திலிருந்தும் விடுபட்டது போன்ற ஒரு நிலை, பேசுவது கேட்கிறது ஆனால் எதுவும் அர்த்தம் ஆகவில்லை, என் மனம் மேலும் அமைதி அடைகிறது… கண்களின் கரு விழி விரிவடைந்தது, பிறகு என் உடலும் அசைவதை நிறுத்திக்கொண்டது, எடை அற்றவனாக இருந்தேன் என்னை சுற்றி உள்ள அனைத்தோடும் கலந்து போயி இல்லாமல் இருப்பது போன்ற நிலை.
சட்டென அகஸ்டா எழுந்து வீட்டிற்குள் சென்றார் … சுதாரித்துக்கொண்டு நானும் எழுந்தேன் ….அப்போது மேலும் ஒரு அற்புத நிலை …. என் உடலின் இருப்பையும் … உடலின் உள்ளும் புறமுமாக …காற்றை போல மெல்லிய எடை கொண்டது போல் என் மனதின் இருப்பையும் என்னால் உணர முடிந்தது… அப்போது குருநாதர் என்னிடம் ஏதோ கேட்க பதில் கூறினேன் அதையும் என்னால் விழிப்போடு சாட்சியாய் பார்த்துக் கொண்டிருக்க முடிந்தது அந்த நிலை “ஒரு சில நிமிடங்களே நீடித்தது” என்றாலும் அதிர்ந்து போனேன்.
இத்தனை வருடங்கள்… அகஸ்டா கூறிய ஆன்மீக சாரத்தை…ஒரு சில நிமிடங்களில் அவரது இருப்பு… அவரது பிரணாஹுதி எனக்கு உணர்த்திவிட்டது அன்றிலிருந்து இன்று வரை எப்போது அவரை நினைத்தாலும் கண்கள் லேசாக கலங்கிவிடும். எப்போது அவரை சந்தித்தாலும் எதுவும் கேட்கத் தோன்றாது அவர் சொன்னது தான் ஞாபகத்திற்கு வரும். ‘கோடீஸ்வரரிடம்.. எப்போதும் ஒரு ரூபாய் பிச்சை கேட்காதே’ என்று. அகஸ்டாவிடம் நான் எப்போதும் ஒரு ரூபாய் கேட்டதில்லை.. அவர் எமக்கு அளித்ததை திருப்பித் தர வழியில்லை..
பெரு மடையின் சிறு துளி நான்…
எம் குருநாதருடன் இருந்த பலர் பெற்ற அனுபவங்களில் ஒரு சிறு துளி இது…
ஆனந்த தருணங்கள் தொடரும்…